Sunday, April 22, 2012

குற்றமும் தண்டனையும்

உங்களில் உத்தமர் எவரோ
அவர் முதலில் பந்தத்தை எறியட்டும்
எனக் கத்தினேன்.
முதலில் ஏழு பந்தங்கள் விழுந்தன.
பின்னர் என் வீட்டை எரிக்கத் தேவையானவைகள்.
கூட்டம் கத்திக்கொண்டே
அடுத்த இலக்கை நோக்கி ஓட ஆரம்பித்தது.
நானும் இணைந்து கொண்டேன்.
கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல்
உங்களை குருடர்களாகவும்
பொக்கைகளாகவுமாக்கும் மூடர்களே
எனக் கத்திக்கொண்டிருந்தான் வீட்டுக்காரன்.
நீ ஹமுராபியிடம்
பேசிக்கொண்டிருக்கிறாய் மூட
என முதற் பந்தம் எறிந்தது நான்.
மேலும் பல தீர்ப்புகள்
மேலும் பல தண்டனைகள்
மேலும் மேலும் ஓடிக்கொண்டிருந்தோம்.
பந்தங்களின் ஒளியால் ஊரே பகலாயிருந்தது.
ஒரு கட்டத்தில் கால்கள் பின்னின.
தண்டிக்கப்பட வேண்டியவர்கள்
எண்ணிக்கை குறையப் போவதில்லை.
அலுத்துத் தளர்ந்தேன் - பக்கந்திரும்பி
வெளிச்சங்கள் தொலைந்த
தூர மலை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
இன்றிரவாவது தூங்க வேண்டும்.