வெளிப் படுத்த
முடியாத கோபம்,
இயலாமையின்
எரிச்சல்.
என்ன முயற்சித்துப்
பார்த்தாலும்
இயல்பாய்
இருக்க முடியவில்லை.
என்னிடம் துளிர்க்க
ஆரம்பித்திருக்கும்
அந்த நச்சு ஆப்பிள் கடித்து
ஒருவர் இறப்பதற்குள்,
யாராவது என்னிடம்
தப்பு செய்து மாட்டிக் கொள்ளுங்களேன்!
Project Implementation-காக கண்ட கண்ட ராத்திரி வேலைகளில் உட்கார்ந்திருக்கிறீர்களா? 'ஆப்பிதேத்தூயூ' என்று நாய் பொம்மைக்கு டோனட் ஊட்டிகொண்டிருந்த மகளுக்கும், அவள் இறைத்துப் போட்ட பொம்மைகளை அடுக்கிக் கொண்டிருந்த மனைவிக்கும் டாட்டா காண்பித்துவிட்டு, இருட்டில் ஒரு நத்தையை தெரியாமல் மிதித்துக் கொன்று விட்டு அலுவலகம் சென்று அமர்ந்தால், உங்கள் டிபார்ட்மென்ட் பேட்ச் கொஞ்சம் தாமதமாகும் என்றார்கள். Log எல்லாம் ஆவதால் அலுவலகத்தில் அடக்கமாக Wikipedia, Google News மற்றும் சில siteகளோடு நிறுத்திக் கொள்வது. அப்போதுதான் இரண்டு நெருடலான விஷயங்களின் மீது இடறி விழுந்தேன்.
விஷயம் 1: இந்தியா ஒரு ஐரோப்பிய நாட்டை எதிர்த்து இராணுவத் தாக்குதல் நடத்தி வெற்றி பெற்றிருப்பது இதற்கு முன் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? கோவா இந்தியாவுடன் இணைக்கப் பட்ட விதமும் ஆப்பரேசன் விஜயும் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? விக்கிபீடியாவில் Operation Vijay மற்றும் அது சம்பந்தமான செய்திகளைப் படித்தபோது ஒரு விறுவிறுப்பான நாவலுக்குரிய எல்லா அம்சங்களுமங்கே இருந்தது. போர்ச்சுகல் ஆதிக்கம் - விடுதலைப் போர் - இந்தியா தலையிடுதல் - போருக்கு தயாராதல் - ஆப்பரேசன் விஜய் - 36 மணி நேரப் போர் - அமெரிக்க, பிரெஞ்சு ஐநா தடை - ரஷிய வீடோ மூலம் நம்மைக் காத்தல் - இந்தியா வெற்றி - போர்ச்சுகல் செல்லும் வீரர்களுக்கு அங்கு கிடைத்த அவமரியாதை. மொத்தத்தில் இந்தக் கதைகளை வரலாறு பாடத் திட்டத்தில் சேர்த்திருந்தால் தூங்கி வழியும் வரலாறு வகுப்புகள் எவ்வளவு சுவாரசியமாக இருக்கும்? ஏன் எனக்கு செய்யவில்லை?
விஷயம் 2: ஜெனீவாவில் நடக்கும் சோதனையைப் பற்றி தெரிந்து கொள்ள போனபோது இடறி விழுந்தது. CERN ஆய்வுக்கூடம் மற்றும் சம்பந்தமான விஷயங்கள் உண்மையாகவோ பொய்யாகவோ ஏற்கனவே கொஞ்சம் தெரிந்ததுதான் (உபயம்: Angels & Daemons). ஆனால் எடின்பரோ நகர அறிவியலாளர் ஒருவர் சம்பந்தப் பட்டிருப்பது கொஞ்சம் சுவாரசியத்தைக் கூட்டியது. Peter Higgs-ன் அந்த Boson பற்றி தெரிந்து கொள்ளப் போனேன் (ஒன்னும் புரியாவிட்டாலும் இந்த மாதிரி blog எழுத, ஒரு அறிவாளித் தோரனையை கூட வேலைப் பார்ப்பவர்களிடம் ஏற்படுத்த உதவுமே என்று!). Boson-ன் பெயர்க்காரணம் தெரிந்து அதிர்ந்து போனேன். அது ஒரு கொல்கத்தாக்கார இந்தியா அறிவியலாளர், போஸ் - சத்யேந்திர நாத் போஸ், என்பவரது பெயரிலிருந்து உருவானது. கால காலமாக JC போஸ், CV ராமன் மற்றும் HG குரானா ஆகியோரைத் தாண்டி நவீன இந்திய அறிவியலாளர்கள் எவரையும் நமது பாடத்திட்டம் நமக்கு அறிமுகம் செய்ததில்லை. SN போஸ் ஐன்ஸ்டீனால் பாராட்டப் பெற்றவர், ஐன்ஸ்டீனால்தான் அவரது papers வெளி வந்தன என்பது மகிழ்ச்சியை அதிகரிக்கிறது. ஏன் நான் இவரைப் பற்றி இதுவரை தெரியாதிருந்தேன்?
இது மாதிரி இன்னும் எத்தனை மனிதர்கள் மற்றும் செய்திகள்? தட்டையாக தூங்கி வழியும் வகுப்புகளைக் களைந்து எல்லோரும் பங்கு பெரும் சுவாரசியமான interactive-ஆன வகுப்புகள் நடக்க இன்னும் எத்தனை யுகங்கள் ஆகும்? அல்லது Project Implementationக்காகவும் நத்தையை மிதிக்கும் ஒரு ராத்திரிக்காகவும் எல்லோரும் காத்திருக்க வேண்டுமா?
எனக்குப் புரிகிறது -
அந்தக் கருவிழிகளின் அசைவிலும்,
புருவங்களின் நெரிப்பிலும்,
இதழ்களின் விரிப்பிலும்
உள்ள தயக்கங்களின் மொழிகள்!
இனி நான் உனக்கான
கனாக்களை காண்பதில்லை.
என் பேனாவை எறிந்துவிட்டேன் -
உனக்கான கவிதைகளை வேறு யாரோ
எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்.
இன்னொரு முறை
சந்திக்க நேரிடும் போதும் பேசிவிடாதே -
காதல் என்பது காதலிப்பதில்
மட்டும் இல்லை!
இப்படியே இருந்துவிட்டுப் போகட்டும் -
இதுவும் பரவசமாய்த் தான் இருக்கிறது!
நள்ளிரவு நேரமாதலால் கவனிக்கவில்லை -
நசுங்கிய சத்தம் மட்டுமே கேட்டுக் குனிந்தேன்.
முதலில் பதட்டம்,
பின்னர் கவனித்து நோக்கியதில் தெளிந்தேன்.
கடைசியில் கோபம் - ஏன் வந்து என் காலில்
மிதி பட்டாய் என்று?
இப்படி சில நத்தைக் கூடுகள அவ்வப்போது.
ரோட்டோரங்களில், பள்ளிக்கூடங்களில்,
திருவிழாக்கூட்டங்களில் மற்றும் பல இடங்களில்.
நானும் உங்களைப் போலவே
நசுங்கிய நத்தைகளையும் குற்ற உணர்வையும்
தள்ளிவிட்டுத் தொடர்ந்து பயணிக்கிறேன்.
நத்தைகளையும் மிதித்தவர்களையும் திட்டியபடியே -
கொஞ்சம் கூட உறுத்தலிலில்லாமற்!
அந்த அறைக்கதவு மெல்லத் திறந்தது எந்த ஓசையும் எழுப்பாமல். அகால நேரமாகிவிட்டபடியால் குறைந்த அளவிலே விளக்குகள் வரண்டாவில் எரிந்து இருளும் வெளிச்சமும் அணைத்துக்கொண்டு தூங்கிக் கொண்டிருந்தன. நிழல் மெல்ல சுற்றிலும் பார்த்தவாறே வரண்டாவையும் வரவேற்பறையையும் தூங்கிக் கொண்டிருந்த காவலாளியையும் கடந்து மருத்துவமனையின் வாசலுக்கு வந்தது. கீழ்த்திசையில் நின்று கொண்டிருந்த காலையில் வந்த ஆம்புலன்சுக்கு எதிர்த் திசையில் இருந்த கும்மிருட்டுக்குள் நிழல் விடு விடுவென நடக்கத் தொடங்கியது.
கொஞ்ச நேரம் நடந்திருக்கும்.
"நில், எங்கே போகிறாய்?" என்றது கடவுள்.
நிழல் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது.
"நீ செய்வது தவறு. உனக்கிடப்பட்ட மூன்று கட்டளைகளில் முதல் மற்றும் மூன்றாம் கட்டளைகளை மீறுகின்றாய்."
"ஆமாம், முதல் மற்றும் மூன்றாம் கட்டளைகளுக்குள் ஒன்றும் பெரிதாக வேறுபாடு கிடையாது. அதையேத்தான் வேறு மாதிரி இரண்டாகப் பிரித்திருக்கின்றாய்."
கடவுள் உணர்ந்து கொண்டது போல சிறிது நேரம் அமைதியாக இருந்தது.
"சரி போகட்டும். ஆனால் நீ கட்டளையை மீறி எங்கே செல்கின்றாய்? விடிவதற்கு இன்னும் ஒரு சாமம்தான் இருக்கிறது. இந்த இரண்டரை நாழிகைக்குள் எங்கு போவதானாலும் போய்விட்டு திரும்பி விடு."
"நான் திரும்புவதாக உத்தேசம் இல்லை."
"இதற்கு தண்டனை என்ன தெரியுமா? காலையில் அவன் எழுந்ததும் நீ இல்லையென்றால் பிரச்சினை ஆகிவிடும்."
"அவன் எழுந்தால் ஒன்றும் கவலை இல்லை. உனக்கு வெஸ்டிஜியல் ஆர்கன் என்றால் என்ன என்று தெரியுமா?"
கடவுள் கொஞ்ச நேரம் அமைதி காத்து விட்டு, "தெரியாது!" என்றது.
"நான் இனிமேல் அவர்களுக்குத் தேவை இல்லை."
கடவுளும் நிழலும் சிறிது நேரம் மௌனமாகத் தொடர்ந்தன.
"ஆனால் இவ்வாறு நீ திரும்பி வந்தால் உனக்கு தண்டனை நிச்சயம்."
"என்ன தண்டனை தருவாய்?"
"உனக்கு பதிலாக அவனுக்கு வேறொருவரை நியமித்து விடுவோம். உங்கள் இரண்டு பேரில் ஒருவர்தாம் இருக்க முடியும். அல்லது அவனைக் கொன்று விட வேண்டும்."
"உன்னால் அவனைக் கொல்லவும் முடியாது. வேறு நிழலும் உபரியாகக் கிடையாது."
கடவுள் ஒன்றும் பதில் சொல்லவில்லை.
இன்னொரு நாழிகை இரண்டு பேரும் பேசாமல் இருந்தனர்.
"சரி. நான் தோற்று விட்டேன். நீ திரும்பிப் போ." என்றது கடவுள்.
நிழல் எதுவும் பேசாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.