Saturday, April 27, 2019

இரவல் வெளிச்சம்

முன்பொரு சித்ரா பௌர்ணமி பின்னிரவில்தான் இளமதி சொன்னாள்,
"நானும்கூட ஒரு நிலவுதான்...".
கலவி முடித்துக் களைத்திருந்த ராமனுக்கு ஒன்றும் புரியவில்லை.
"ஆமாம், நீ ஒரு...",
"நீ நினைக்கிறபடி சொல்லவில்லை...".
அன்று அவள் வேறெதுவும் பேசவில்லை.
பின்னாளில்
ஒரு புகைவண்டி பயணத்தில்
மகன் சூர்யாவுடன் பிரிந்துபோனதும்
ஒரு பௌர்ணமி நாளின் நள்ளிரவே...
ரத்தம் மட்டுமே குடிக்கப் பழகியிருக்கும் வேடுவனுக்கு கண்ணிலுறைந்திருக்கும் நீர்த்துளிகள் தெரிவதில்லை...
ஒவ்வொரு முழுநிலவின்போதும்
இளமதிக்குச் சொல்லிவிடுகிறேன்
அஃறிணைகள் மட்டுமே
பரிணாமங் கொள்வதில்லையென...