Thursday, April 14, 2016

நானும் கடவுள்

இன்னும் எத்தனை ரகசியங்கள்
என்னிடம் மறைத்திருப்பாய்? என்றாள்,
என் கையை எடுத்துத் தன் தலைக்கு முட்டுக் கொடுத்தவாறே!
சிரித்துக் கொண்டே தலையை குறுக்காக ஆட்டினேன்.
இல்லை, சொல்லிப் பார், ரகசியமா எனச் சொல்கிறேன் என்றாள்.
அவளுக்குத் தெரிந்த சிலவற்றைச் சொன்னேன்.
பெருமிதத்தில் முகம் மலர்ந்தாள் - என்னை
முழுதாட்கொண்ட இறுமாப்பு.
எனக்குத் தெரியாதே, இத்தனையா? - நடித்தாள்.
கொம்புகளும், கூர்முனை கொண்ட வாலும்
எனக்கு வெளிவரத் தொடங்கின - பாம்புருவங் கொண்டேன்.
மேலும் சில தெரிந்தவைகளை ஆரம்பித்தேன்.
தெரிந்தவைகளாகவே முடித்தேன்.
கடைசியாக அவளுக்கொரு கனி தந்தேன்.
பிறகென்ன, தண்ணீரில் நடப்பதையும்,
அப்பங்களைப் பகிர்வதையும்,
அவதாரங்கள் எடுப்பதையும் சொல்லிவிட முடியுமா?
ரகசியங்களே ரகசியங்களாலானவைதாமே!