போகப் போக எல்லாம்
பழகிக் கொண்டிருந்தது.
வெளிச்சம் வர இன்னும்
சில தசாப்தங்களாகலாமென
அரசாங்கங்கள் அறிவித்திருந்தன.
உலகே கருமை பூண்டிருந்தது.
கூரான வடிவங்கள் தடை செய்யப்பட்டன.
வளைவு முனைகளே ஆகமமாகியிருந்தது.
பிறவிக் குருடர்கள்
பெருந்தலைவர்களாகி
வழிகாட்டிக் கொண்டிருந்தனர்.
சர்க்கரை வியாதிக்காரர்கள்
பாத்ரூமுக்கு பக்கத்தில் படுத்துக்கொள்ள
கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
கூகைகள் தேசியப்பறவைகளாக
அங்கீகரிக்கப் பட்டிருந்தன.
எல்லாம் பழகி விட்டிருந்தது.
பின்னொரு நாளில்
வெளிச்சம் வந்தபோது
இருள் எளிமையாகி விட்டிருந்தது.
வெளிச்சம் சங்கடமாக இருந்தது.