Sunday, May 10, 2026

மறுகரை

நம்மிருவருக்கும் நடுவிலிருப்பது

குருதி பூத்த நதியொன்று.

உனது கரையில்

மௌனம் சத்தத்தின் மீது

வன்முறை செய்கிறது.

கேள்விகளை

எள்ளி நகையாடுகிறது.

புறந்தள்ளல்

எதிர்வினைகளின் முதுகில் குத்துகின்றன.

உரையாடல் குறைந்தபட்ச

மரியாதை வேண்டி நிற்கிறது.

இருபுறமிருந்தும்

புறக்கணிப்புகளும் முன்முடிவுகளும்

களிகொண்டு கண்சிவந்து

வெறியாட்டமாடுகின்றன.

அந்திகள் மங்குவதே யில்லை.

சங்குகள் என்றும்

ஒலித்த தில்லை.

நதி மட்டும் சலனமின்றி

ஓடிக்கொண்டே யிருக்கிறது.

இப்பாவிகள் தாம் செய்யும்பிழை

இன்னதென அறிகிலார்

பரலோகத்துப் பிதாவே.

இவர்களை மன்னித்து விடாதீர்கள்.

தயவுசெய்து

தண்டித்து அருளுங்கள்.

No comments: