Wednesday, December 14, 2011

போதி நிழற் புற்கள்

விபரம் தெரிந்த நாட்களிலிருந்தே
என்னோடு தொடர்ந்து வளர்கின்றன
அந்த மூன்று நாய்கள்.
கொழுத்துச் செழித்து
இருப்பதாக எனக்குத் தெரிந்தாலும்
கோரைப் பற்களை நான் கவனித்ததில்லை -
நண்பர்கள் கூறுவதுண்டு.
எங்களூரில் வெகு சிலரிடமே உள்ள
இவற்றுக்கென இரைகள்
அந்தச் சிலர் மட்டுமே அறிந்த
இடங்களில் கிடைக்கின்றன.
அவற்றின் வெறியின் உச்சத்திற்கு
பலியான நண்பர்களும் உண்டு.
நானும் மற்றும்
அந்த இன்னுஞ்சிலரும்
அவை அளித்த
பாதுகாப்பை மட்டுமே உணர்ந்திருந்தோம்.
சித்தார்த்த கௌதமன் இன்னும் மோசம் -
யசோதாவும் ராகுலனும்
அவனது நாய்களால்
இறந்து பட்டது கூடத் தெரியாது.

No comments: