Saturday, June 03, 2023

நீரளவு நீராம்பல்

சரவணனுக்கு அழுகையே வரவில்லை.

போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்

தற்கொலைதானென 

உறுதி செய்திருந்தது.

மாமனார் கண்ணோடு 

கண் நோக்கவில்லை.

பெருங்கூட்டத்துக்கு நடுவே 

தனியனாய் நின்றுகொண்டிருந்தான்.

வெட்டியான் கடைசி வரட்டி 

எடுத்துக்கொண்டு 

முகம் பார்த்துக்கொள்ள சொன்னபோதோ

ஆற்றில் தலைமுழுகும்போதோ

வீடுவந்தபின் கட்டிக்கொண்டு அழுத

மகள்களைப் பார்த்தோகூட

சரவணனுக்கு அழுகை வரவில்லை.

அறுத்துக் கொண்டிருந்ததெல்லாம்

ஒரேயொரு கேள்விதான் - 

இன்னும் கொஞ்சம் நம்பியிருக்கலாமோ?

Sunday, October 10, 2021

ராகுல் அப்பா

ராகுல் அப்பா வலக் கையில்தான்

எப்போதும் கடியாரம் கட்டுவார்.

வேலை முடிந்து தெரு நுழையும்போதே 

அவர்தானென்பது அத்தர் வாடையிலேயே தெரிந்துவிடும்.

ரொம்பத் தன்மையான மனிதர்.

அதிர்ந்து ரெண்டு வார்த்தை பேசமாட்டார் - 

யாரும் நோகப் பேசியதேயில்லை.

அவர் பேர்கூட யாருக்கும் தெரியாது.

ராகுல் பத்து வருடங்களுக்கு முன்பே

பெயிலான பாடங்களுக்காக

அவரிடம் அடிவாங்கிய இரவில்

வீட்டைவிட்டு ஓடி விட்டாலும்,

எல்லோரும் ராகுல் அப்பா 

என்றே இன்றுவரை கூப்பிடுகிறோம்.

Saturday, July 03, 2021

காக்கைக் கூடுகள்

ராமசேஷன் வந்திருப்பதாக அம்மா ஃபோனில் சொன்னபோது 
பஸ் பிடிக்க நடந்து கொண்டிருந்தேன்.
அவர் திரும்பிப் போக எப்படியும் 
ஒரு பத்து நாளாகும்.
அதுவரை நான் தங்குவதற்கு 
இடம் தேட வேண்டும்.
தெருவில் ஏதும் நண்பர்களில்லை - 
மூத்த மகன்கள் இருவரும் அவரை 
அடிக்காத குறையாக ஒருமுறை
அழைத்துச் சென்றதற்குப் பிறகு.
எப்போதும் சகஜமாகப் பேசும் 
மஞ்சள்வீட்டு ஆண்ட்டி கூட
ராமசேஷன் காலங்களில் தன்னைச்
சுருக்கிக் கொள்வதாகத் தோன்றும்.
தன்னை நிறுவிக் கொள்வதற்காக
அம்மா கேட்கும் அரிசிக்கும், 
பருப்புக்கும், இனிப்புக்குமாக
இவரும் கடைக்கும் தெருவுக்குமாக
 லஜ்ஜையின்றி அலைந்து கொண்டிருப்பார்.
யோசித்துக்கொண்டே 
ரோட்டைக் கடக்கும்போது 
சிவப்பு விளக்கிருக்கும்போதே கடந்த
காரொன்று சேற்றை வாரிப் 
பூசிவிட்டுச் சென்றது.
கார்காரன் சன்னலிறக்கி நடுவிரல் காண்பித்து பாஸ்டர்ட் எனக் 
கத்திவிட்டுச் சென்றான்.
நான் இன்னும் எங்கு செல்வதென்று
முடிவு செய்யவில்லை.

Saturday, October 03, 2020

செல்லாத நோட்டு

வரதராஜன் சாரை
சன்னதித் தெரு முனையில்
பெட்டிக்கடையில்தான் சந்தித்தேன்...
அலுமினி சந்திப்புக்கு அவர் வரவில்லை.
வெக்டருக்கும் ஸ்கேலாருக்கும் வித்தியாசம் தெரியாமல் விழித்துக்கொண்டிருந்த காலத்தில் திசை காட்டியவர்.
எப்போது ரிடையர் ஆனாரென்று தெரியாது.
மூத்த மகள் யாருடனோ ஓடிவிட்டதாக கேள்விப்பட்டேன்.
அறிமுகப்படுத்திக்கொண்டபோது ஆச்சரியப்பட்டார்.
சந்தோஷப்பட்டது உண்மை போலிருந்தது.
வலிய ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தார்.
டீ வாங்கிக் கொடுத்து
கிளம்பும் முன் ஐநூறு ரூபாய் நோட்டுகளில் ஒன்றை அவர் பாக்கெட்டில் வைத்தேன்.
இன்னொரு இருநூறு ரூபாய் இருக்குமா என்றார்.
சில்லறை இல்லையென்றுவிட்டு வந்துவிட்டேன்.

Saturday, January 25, 2020

அம்பறாத்தூணி

மாப்பிள்ளைக்கு பதினாறாம் நாள்.
செம்புந்தண்ணி வைத்துப் படையல்.
பூரணி தெளிந்திருந்தாலென்று
நினைக்கிறேன்.
அவள் வயசான சடங்கிற்குப் பிறகு
இருவரும் பெரிதாகப் பேசிக்
கலந்துகொண்டதில்லை.
மறுவீடு வந்துசென்றபோது
அழுதபோதும்கூட இன்றுபோலவே
என்ன சொல்வதெனத் தெரியாது
திகைத்திருந்தேன் - அவள்
அம்மாவுக்குத்தானே அவளைத் தெரியும்.
அய்யர் வர இன்னும் நேரமிருந்தது.
பங்காளிகள் சீட்டாடிக்
கொண்டிருந்தனர்.
பெண்கள் மறுபடியும் அழ
ஆரம்பித்தார்கள்.
எனக்கும் பூரணிக்கும் இருந்த
இடைவெளியை
சடங்குகள் நிரப்பிக்கொண்டிருந்தன.
எல்லா பனிபொழியும் இரவுகளும்
இனிமையானவைகளல்ல.