Saturday, December 17, 2011

The Road Not Taken

அம்மாவிடம்
சத்தியங்களைப் பண்ணி விட்டாயா
என்று கேட்டேன்.
தேவையா என
யோசித்துக்கொண்டிருக்கின்றேன் என்றான்
பொடிமாஸில் இருந்த மிளகாயை
எடுத்துப் போட்டுக் கொண்டே.
சிறிது நேரம் கழித்து
வழக்கத்தை விட சீக்கிரமாகவே
எழுந்து போய் விட்டான் -
பயணத்துக்கான ஏற்பாடுகள்
இன்னும் பாக்கி இருப்பதாக.
மோகன் அம்மாவிடம்
சத்தியம் பண்ணிக்
கொடுத்தானா இல்லையா
என்று தெரியாது.
ஆனால் அவன் திரும்பி வரும்போது
வாங்கி வந்த ஸ்காட்ச்சுகள்
புகைவண்டிச் சம்பவத்துக்கு
பழிதீர்த்த நாளின்
பின்னிரவில் பயன்பட்டன.

Wednesday, December 14, 2011

போதி நிழற் புற்கள்

விபரம் தெரிந்த நாட்களிலிருந்தே
என்னோடு தொடர்ந்து வளர்கின்றன
அந்த மூன்று நாய்கள்.
கொழுத்துச் செழித்து
இருப்பதாக எனக்குத் தெரிந்தாலும்
கோரைப் பற்களை நான் கவனித்ததில்லை -
நண்பர்கள் கூறுவதுண்டு.
எங்களூரில் வெகு சிலரிடமே உள்ள
இவற்றுக்கென இரைகள்
அந்தச் சிலர் மட்டுமே அறிந்த
இடங்களில் கிடைக்கின்றன.
அவற்றின் வெறியின் உச்சத்திற்கு
பலியான நண்பர்களும் உண்டு.
நானும் மற்றும்
அந்த இன்னுஞ்சிலரும்
அவை அளித்த
பாதுகாப்பை மட்டுமே உணர்ந்திருந்தோம்.
சித்தார்த்த கௌதமன் இன்னும் மோசம் -
யசோதாவும் ராகுலனும்
அவனது நாய்களால்
இறந்து பட்டது கூடத் தெரியாது.