Tuesday, December 02, 2014

இனிச் சாகும்...

நாம் தோற்றுக்கொண்டிருக்கிறோம் மூடர்களே 
என்றான் தலைவன் - 
பாதி கடித்த அதிரசத்தைத் தூக்கி எறிந்துகொண்டே.
கூட்டம் சலசலப்பு நிறுத்தி 
உச்சி மலை நோக்கித் திரும்பியது.
சற்று நேரம் மவுனம் நிலவியது.
போராட்டத்தைத் துவங்கு தலைவா 
எவனோ ஒருவன் கத்தினான்.
புரட்சி ஓங்குக - இன்னொருவன்.
ஆமோதித்த குரல்கள் மலைபட்டுத் தெறித்தன.
தலைவன் ஏதும் பேசாமல்
சில அதிரசங்களை கூட்டத்தை நோக்கி எறிந்தான்.
ஒரு கெட்ட நாற்றம் வீசியது - 
கூட்டம் தலைவனென்றும், 
தலைவன் கூட்டமென்றும் 
சகித்துக் கொண்டார்கள்.
கூட்டத்திலிருந்து விலகி
தலைப்பாகையை அவிழ்த்துத் 
தோளில் போட்டுக் கொண்ட ஒருவன் 
தேங்காய் மூடிகளை எடுத்துக்கொண்டு 
பன்றிகள் தொழுவத்தைத் தேடிப்போனான்.