நாங்கள் எப்போதும் விளையாடும்
மரப்படிகளுக்குக் கீழேதான்
தாச்சுவை என்னிடம் அப்புனு கொடுத்தாள்.
அவங்க அப்பாவுக்கு ட்ரான்ஸ்ஃபராம், குடிபெயர்ந்து சென்றார்கள்.
தாச்சு நன்றாகத்தான் இருந்தது - ஒன்றிரண்டு இடங்களில் நூல் பிரிந்திருந்ததைத் தவிர.
பத்திரமாக வைத்திருந்தாலும் அவ்வப்போது பிரிந்த நூல் வழியாக
பஞ்சுகள் வெளிவந்துகொண்டிருந்தன.
ஆனாலும் புதுப்பஞ்சடைத்து அப்படியே வாங்கியமாதிரியே பதப்படுத்தியிருந்தேன்.
பிறிதொரு நாளில் அப்புனுவை அவள் கல்யாணத்துக்கு முன் சந்தித்து கொடுத்தபோது
தாச்சுவா, ஞாபகம் இல்லையே என்று சொல்லி வாங்கிக் கொண்டாள்.
தாச்சுவுக்கு ஏமாற்றமாகத் தெரியவில்லை என நினைக்கிறேன்
எப்போதும் போலவே சிரித்துக்கொண்டிருந்தது.