Monday, December 02, 2019

முழுக் கணம்

கோப்பையை அருகிலிருந்த
மூளிக்கல்லொன்றின்மீது வைத்தேன்.
தூணென்றானொருவன்.
ஆமோதித்த மற்றவன்
சாய்ந்து காற்றாடலாமென்றான்.
ஓகாரமிட்ட மற்றவர்கள்
முடிவுக்கு வந்ததாய் தலையசைத்தனர்.
எடுத்துரைக்க ஆரம்பித்தனர்.
சுற்றி நின்ற எல்லோரும்
குறிப்பெடுத்துக் கொண்டனர்.
தகவலைப் பரிமாறத் தொடங்கினர்.
உண்மையறிந்த கூக்குரல்
ஊரெங்கும் பரவியது.
தூரத்து மூலையிலிருந்த
குள்ளனொருவன்
மெல்ல முனகிக் கொண்டான் -
ஆனை தெரியாக் குருடர்களென்று.
பக்கத்திலிருந்து இன்னொரு கல்லை
மூளியாக்கிய சிற்பி
பெருமிதமாய்ச் சிரித்துக்கொண்டான்.
கோப்பையைப் பார்த்தேன் -
தேநீர் பாதியிருந்தது,
காற்று மீதியிருந்தது!

No comments: